கல்வியில், 191 நாடுகளில் இந்தியா 145வது இடத்தில் பின்தங்கி இருக்கிறது. இந்தியக் கல்வியில் பெரும் மாற்றங்கள் தேவை என்பது, பல காலமாக உணர்ந்து பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட தேசிய வேதனை. ஆனால் இந்தக் கல்விக்கொள்கை அதற்குத் தீர்வாகத் தோன்றியிருக்கிறதா அல்லது பூதமாகக் கிளம்பியிருக்கிறதா என்பதுதான் கேள்வி.
பெரும் கனவுகளைக் கடைவிரிக்கிறது இந்தக் கொள்கை. ஆனால், அவற்றை எட்டுவதற் கான பாதை அமைக்கத் தவறுகிறது. கல்வியை ஒரு படி மேலே ஏற்றுவதற்கு, நிதி ஒதுக்கீட்டைப் பல மடங்கு உயர்த்த வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லை. பட்ஜெட்டின் மொத்த செலவினத்தில் பள்ளிக் கல்விக்கான ஒதுக்கீடு 2016-17ல் 2.2 சதவீதமாக இருந்தது. 2019-20ல் அது 2.03 சதவீதமாகவும் அதில் உயர்கல்விக்கானது 1.6 சதவீதத்திலிருந்து 1.38 சதவீத மாகவும் குறைந்திருக்கிறது. இந்தக் கல்விக்கொள் கைக்கான எதிர்ப்பை மூன்று C-க்களில் சொல்லலாம். Centralisation. Commercialisation.Communalisation மையப்படுத்தல், வணிகமயமாதல், மதமயமாதல்.
மத்தியில் அதிகாரக் குவிப்பு, மாநில சுயாட்சி ஒழிப்பு!
பல தேசிய இனங்களின் இணைப்பான, பன்முகச் செழுமை கொண்ட இந்திய நாட்டுக்கு ஒரே கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்ள இயலாதது. உலகின் எந்த வளர்ந்த நாட்டிலும் நாடு முழுமைக்கும் மத்தியப்படுத் தும் ஒரே கல்விக் கொள்கை கிடையாது. சொல்லப்போ னால், வளர்ந்த நாடுகளில் கல்விதான் மிக அதிகமாக அதிகாரப்பரவல் செய்யப்பட்ட நிர்வாகப்பிரிவு. அங்கு மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக் கும் பெருமளவு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிகார குவிப்புக்கு என்றே கல்வியின் அனைத்துப் பிரிவுகளையும் கட்டுப்படுத்துவதற்காக ஏராளமான நிறுவனங்கள் அமைக்கப்படவுள்ளன. பிரதமரைத் தலைவராகக் கொண்ட ராஷ்டிரிய சிக் ஷா ஆயோக் தொடங்கி தேசிய கல்வி ஆணையம், தேசிய தேர்வா ணையம், பொது கல்வி நிறுவனம், உயர்கல்வி நிதி நல்கை ஆணையம், தேசிய ஆய்வு நிறுவனம், தேசிய உயர்க்கல்வி உயர் கட்டுப்பாடு நிறுவனம் இன்னும் பல. மேற்கண்ட நிறுவனங்களில் ராஷ்டிரிய சிக் ஷா ஆயோக்தான் இந்திய கல்வியின் உச்ச அதிகாரம் பெற்ற நிறுவனம். அதுவே, அனைத்து முடிவுகளையும் எடுக்கும் இறுதி அதிகாரம் கொண்டது. அதுவே மாநில அரசுகளுக்கு கல்வித்திட்டத்தை உருவாக்கித் தரும். கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும்; கட்டுப் படுத்தும்; தேர்வு நடத்தும். பட்டம் அளிக்கும் அதிகாரங் கள் கூட மாநில அரசுக்கு கிடையாது. கூட்டாட்சியை அழித்தொழிக்கும் முயற்சி இது. உயர்கல்வி நிறுவனங்களுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டுமெனில், அது மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இயலும். இனி இளங்கலை உட்பட உயர்கல்வியில் எந்த பிரிவாக இருந்தாலும் நாடு முழுவதற்கும் ஒரே தேர்வாக மத்திய அரசின் National Testing Agency நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் இடம் பெற முடியும். மாநில பாடத்திட்டங்களின் பள்ளி இறுதித் தேர்வுகள் தேவையற்றவையாகி விடும். நீட் போன்று மத்தியில் நடத்தப்படும் இந்தக் கட்டாய நுழைவுத் தேர்வுகள், ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். இனி உயர் கல்வி முழுவதுமே வசதி உள்ளவர்களுக்கு உரியதாகி ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விடும்.
தனியார்மயமும், வணிகமயமும்!
‘தனியார் துறை, லாப நோக்கில் இயங்காத துறை யாக விளங்கும்’ என்று இந்தக் கொள்கை சொல்கிறது. அதற்கு என்ன உத்தரவாதம்? ஏற்கெனவே, தனியார் கல்வி நிறுவனங்களின் கேட்பாரற்ற கொள்ளை வெட்ட வெளிச்சம். தனியார் கல்வி நிறுவனங்களைக் கண்கா ணிக்கும், கட்டுப்படுத்தும் அரசின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கு மாறாக, தனியார் கல்வி நிறுவ னங்களுக்கு முழு சுதந்திரமும் அதிகாரங்களும் அளிக்க ப்படுகின்றன. கூடவே ‘தனியார் கல்வி நிறுவனங்கள், சேவை மனப்பான்மை கொண்டு ஒளிரும்’ என்று சொல்கிறது வரைவு. இது யாரை ஏமாற்றும் வேலை? இன்றைய மத்திய அரசின் ஆதாரக் கொள்கையான தாராளமயத்தின் வெளிப்பாடே இது. பள்ளிக் கல்விக்கான கொள்கை மாற்றம் மூன்று வயதிலிருந்து 18 வயது வரை நீள்கிறது. இன்று பள்ளிக் கல்விக்கான ஆதாரச் சட்டமான கல்வி உரிமைச் சட்டம்- 2009, 6 வயதிலிருந்து 14 வயது வரைக்கான கல்வியை மட்டுமே வரையறுக்கிறது. அது 3 வயதிலி ருந்து 18 வயது வரை விரிவுப்படுத்தப்படும் என்று இந்தக் கொள்கை சொல்கிறது. இது வரவேற்கத்தக்கது. பல காலமாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கை நிறைவேறுகிறது. அதேசமயம் இந்தக் கொள்கை, சட்டத்தின் வரைவு களை மோசமாக நீர்த்துப்போகச் செய்கிறது. அது, நிர்ணயித்திருக்கும் தர வரைவுகள், ஒரு பள்ளிக்கான உள் கட்டமைப்பு, ஆசிரியர் தேவை போன்ற அடிப்படை களை கேள்வியாக்குகிறது. ஒரு பள்ளி நிறுவுவதற்கும் நடத்துவதற்கும் எந்த வரையறைகளும் தேவை யில்லை. யார் வேண்டுமானாலும் பள்ளியை நிறுவலாம், நடத்தலாம், இன்று நாடு முழுவதும் ஆசிரியர் பற்றாக் குறை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. குறைந்தது 10 லட்சம் ஆசிரியர்கள் கூடுதலாகத் தேவைப்படுகி றார்கள். இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து, போர்க் கால நடவடிக்கையாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப் பட வேண்டும். அதை விடுத்து தன்னார்வத் தொண்டர் கள் அரசுப் பள்ளிகளின் ஏழைக் குழந்தைகளுக்கு ஆசான்களாக பணிபுரிவர் என்பது தேவையற்றது.
இந்தித் திணிப்புக்கு நிதி
இந்தித் திணிப்புக்கு தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ‘இந்தி திணிக்கப்பட மாட்டாது; மும்மொழிக் கொள்கை தொடரும்’ என்கிறது கல்விக் கொள்கை. அப்படியெனில், தமிழ்நாட்டுக்கு விதிவிலக்காக இரு மொழிக் கொள்கை இல்லை. மூன்றாவது மொழி கற்க வேண்டுமென்றால், அது இந்தியாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய மத்திய பட்ஜெட்டில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்கும் ஆசிரியர் நியமனத்துக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தி பேசும் மாநி லங்களில் மற்ற மொழிகள் கற்பிக்கும் ஆசிரியர் நியம னத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஆகவே இந்தியை நாடு முழுவதும் பரப்புவதுதான் குறிக்கோள் என்பது தெளிவு. பள்ளிக் கல்வியில் கொண்டு வரப்படும் கண்டனத்துக் குரிய மற்றொரு மாற்றம் 3,5,8 வகுப்புகளில் மாணவர்கள் பொதுத் தேர்வுகள் எழுத வேண்டும் என்பது. 9 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை தனித்தனிப் பாடங்கள் தொடர்பான 24 தேர்வுகள் வரை எழுத வேண்டும். இவையெல்லாம் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான தரம் நிர்ணயிக்க உதவும் என்கிறது கல்விக் கொள்கை. உலகெங்கும் பல நாடுகளில் பொதுத் தேர்வு கள் என்பதே அறியாத ஒன்று. வகுப்பு ஆசிரியர்கள் தான் மாணவர்களின் திறனை மதிப்பிடுகிறார்கள். பின் தங்கிய மாணவர்களிடம் தனிப்பட்ட கவனம் செலுத்தி திறன்களை அடையச் செய்கின்றனர். உலக நாடுகளின் தரத்திற்கு இந்தியாவை உயர்த்தப் போகிறோம் என்று மார்தட்டும் மத்திய அரசு, அவர்களின் கல்வி முறையிலிருந்து முரண்படுவது நகைமுரண்!
எட்டாக்கனியாக உயர்கல்வி!
கல்விக்கொள்கை வரைவு ‘உயர் கல்வி பெறும் மாணவர் எண்ணிக்கை 50 சதவீதமாக உயரும்’ என்கி றது. இன்று இந்தியாவில் உயர்கல்வியில் சேர்வோர் விகிதம் 25.8 சதவீதம்தான். சீனாவில் 51 சதவீதம், வளர்ந்த நாடுகளில் இது 80சதவீதத்திற்கும் மேல். இது எப்படி அடுத்த பத்தாண்டுகளில் இருமடங்கா கப் போகிறது? இதுவரை உயர் கல்வி நிறுவனங்களுக் குள் நுழைய முடியாமல் ஏங்கும் அந்த 75 சதவீதத்தி னர் யார்? நம் சமுதாயத்தில் காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்டவர்கள், பட்டியலின, பழங்குடியின, மிகவும் பின்தங்கிய, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான். ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவர்களில் 12 வகுப்பு முடிப்ப வர்கள் எஸ்.டி.யில் 6 சதவிகிதம், எஸ்.சி.யில் 8 சத விகிதம், சிறுபான்மையினரில் 9 சதவிகிதம், பிற்படுத் தப்பட்டோரில் 10 சதவிகிதம் மட்டுமே. இவர்களிலிருந்து ஒரு பகுதியினர்தான் உயர்கல்வி பெறும் தகுதியை இன்று பெற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் உயர்கல்வி பெற வேண்டுமெனில் அது முழுவதும் இலவசமாகக் கிடைத்து ஊக்குவிப்புகளும் இருந்தால்தான் சாத்தி யம். அதற்கு இந்தக் கல்விக் கொள்கை காட்டும் வழி யென்ன? பெரும்பாலானோரை வடிகட்டி வெளியே தள்ளும் நுழைவுத் தேர்வுகள், சந்தைப் பொருளான கல்வி அமைப்புதான் இதில் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் விடுபட்டவர் இணைவதற்கான வழி எங்கே?
இத்துடன் 2030க்குள் 500 வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் மேளதாளத்துடன் வரவேற்கப்படவிருக்கின் றன. நாட்டில் ஏற்கெனவே இருக்கும் 800க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களையும் பல்லாயிரக்கணக்கான கல்லூரிகளையும் செழுமைப்படுத்துவதற்கு பதில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே எதற்கு? இறுதியாக வேறோரு வகைப்பட்ட தாக்குதல்கள். ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற பெரும்பான்மை வாதத்தைப் புகுத்தும் முயற்சி தலைதூக்குகிறது. ‘இந்திய பாரம்பரியம், இந்திய மையம் கொண்ட, இந்திய கல்வியும் பழம்பெரும் மகோன்னதம்’ ஆகிய சொற்கள் வரைவு முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இன்று ஆட்சியில் இருப்போர் ஆன்ம லட்சியமாகக் கொண்ட கலாச்சார தேசியத்தின் வெளிப்பாடுகள் அவை. இந்திய அரசியல் சாசனம் வலி யுறுத்தும் விழும்பியங்களான ஜனநாயகம், மதச்சார் பின்மை, சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றுக்குப் புதிய கல்விக்கொள்கையில் எந்த இடமும் இல்லை!
கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
நன்றி: ஜூனியர் விகடன் (31.7.2019)